Saturday, December 26, 2009

















அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்!

"உண்ணுங்கள் பருகுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான்"

அல் குரான் 7:31

"அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்) யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவனே கெட்ட நண்பன்.

அல் குரான் 4:38

“அவர்கள் இக்குரானை சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்க்கான பூட்டுக்கள் உள்ளனவா?”

அல் குரான் 47:24

இவை யாவும் அல்லாஹ் தன் திருமறையில் கூறியுள்ள வசனங்கள்! இவைகள் அனைத்தும் இன்று மறுக்கப் பட்டு, புறக்கணிக் கப்படுகின்றன என்பதை கீழே காணுங்கள்:

கீழக்கரையில் இப்படியும் நடக்குமா?

திருமணம் என்ற பெயரில் ஒரு தெரு கூத்து!

டிசம்பர் 6 அல்லாஹ் வின் பள்ளி தகர்க்கப் பட்டதினம்!

அந்த தழும்புகள் இன்னும் நமக்கு ஆறவில்லை. அந்த வெந்த புண்ணில் இந்த டிசம்பரிலேயே ஆடம்பரம் என்னும் அன்னச்சார வேலைப் பாய்ச்சி ரணத்தை மேலும் காயப்படுத்தும் நாள் தான் இந்த டிசம்பர்.

டிசம்பர் வந்து விட்டதுஎன்றாலே! ஆடம்பரத்தின் மொத்த உருவம் தலை தூக்கும் நேரம்.

ஆம் கீழக்கரையில் நடை பெற்ற திருமண நிகழ்ச்சிகள் ஓர் திருமண திரு அலங்கோல விழாக்கள்.

நாமெல்லாம் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்று அதன் வழியில் நடக்கக் கூடிய மக்களாக இருக்கின்றோம் என்பதை மறந்து, சுய நினைவை இழந்து பணம் பத்தும் செய்யும்! அது எங்களிடம் இருந்தால் நாங்கள் பதினொன்றும் செய்வோம் என்ற ஆணவ கருத்தில்! இங்கு நடக்கும் திருமணம் ஒரு உதாரணம்.

இந்த திருமண திருவிழாக்களில் பந்தல் படர்வுகளும், பகட்டு விளக்குகளும், தொங்கும் தோரணங்களும், தோகை அலங்காரங்களும், வீடியோ ஒலி பரப்புகளும், வி.ஐ.பிக்களின் வரவுகளும், ஒரு சினிமா சூட்டிங்கில் இருப்பது போல் காட்சி அளிக்கிறது இந்த திருமண வைபவ அலங்காரம்.

எந்த இஸ்லாம் ஆடம்பரத்தை செய்ய வேண்டாம் என்று சூளுரைக் கிறதோ! அந்த இஸ்லாத்தில்! அதுவும் இஸ்லாம் என்ற பேரில் நடக்கும் இந்த திருமண விழா எனும் தெருக்கூத்து! சுபஹானல்லாஹ்! சொல்லி மாய முடியாது! இதைக்கண்டு ஏழைகள் கண்ணீர் வடிக்க வேண்டும், குமருகள் குமுற வேண்டும், குடிசைகள் கொந்தளிக்க வேண்டும், அப்படி ஒரு ஆடம்பரம் இந்த கீழக்கரையில். எந்த ஊரிலும் நடக்காத, எந்த ஒரு மாற்றுமத சமுதாயமும் செய்யாத அனாச்சாரம் இந்த கீழக்கரையில் நடக்கிறது என்றால்! நிச்சயம் யாரும், எவரும் கண்டிக்கத்தான் வேண்டும், வருத்தப் படவும்தான் வேண்டும்.

அதிலும் இந்த கேடு கெட்ட அனாச்சார கலாச்சாரத்தை செய்து வைப்பவர்கள் ஒன்றும் சாதாரண நபர்கள் அல்ல! மாபெரும் மார்க்க அறிஞர்கள், உலமாக்கள், ஆலிம்கள், அதுவும் அப்ஷளுள் உலமாக்கள், ஜமாத்து தலைவர்கள், இன்னும் பேர் போனவர்கள். இவர்கள் தான் மேடையில் அமர்ந்து, மேனி மிலுக்கி, மாலை தோரனங்களுக்கு மத்தியில்! மாப்பிள்ளை, பெண்ணுக்கு நிக்காஹ் செய்து வைப்பவர்கள் என்றால்! அதை நம்ப சங்கடமாகத்தான் இருக்கிறது. இது இஸ்லாத்திற்கு எவ்வளவு பெரிய இழுக்கு, ரசூலுக்கு செய்யும் மாறு? எவ்வளவு பெரிய கேவலம்.

இஸ்லாம் மார்க்கத்தில் எதை செய்யக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கூறி, அதை நாம் கட்டாயமாக அமல் படுத்துவதோடு மட்டும் மல்லாமல்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரிக்காததை மற்றவருக்கும் அதை எடுத்துச் சொல்ல நாம் கடமைப் பட்டவர்களாக நம்மை தூண்டி விட்டுச் சென்றிக் கிறார்கள் என்பதை இவர்கள் மறந்து விட்டு, இந்த காரியத்தை துணிந்து செய்கிறார்களே! இவர்கள் எல்லாம் கண் இருந்தும் குருடர்களா? காதிருந்தும் செவிடர்களா? அல்லது ஓதி படித்த முட்டாள்களா? அல்லது விபரமில்லாத மூடர்களா?

இவர்கள் குரானை ஓதியவர்கள் தானே? ஹதீஸ்களை படித்தவர்கள் தானே! நீங்களே இந்த காரியத்தை செய்தால்! நாம் எப்படி மாற்று மதத்தவறுக்கு நமது இஸ்லாம் மார்க்கத்தை எடுத்து சொல்லி அவர்களை இஸ்லாத்தின் நேர்வழியில் எப்படி வரவழைக்க முடியும்? என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?

இந்த காரியத்தை எல்லாம் நம் முஸ்லிம் சமுதாய மக்கள் வேண்டுமென்றே செய்கிறார்களா? அல்லது பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு செய்கிறார்களா? அல்லது பேர் வாங்கவேண்டும், ஊர் மெச்ச வேண்டும் என்ற காரணத்திற்காக செய்கிறார்களா? அல்லது தாங்கள் கொண்டுள்ள இஸ்லாத்தின் கொள்கைகளை மறந்து விட்டு, அல்லது மறைத்து விட்டு செய்கிறார்களா? என்றே தெரியவில்லை.

இது ஒன்றும்! இன்று, நேற்று நடக்க வில்லை. மாறாக கீழக்கரையில் எப்பொழுது பொருளாதாரம் மிகைத்ததோ! அந்த காலத்திலிருந்தே! காலம், காலமாக நடக்கின்றது. அதுவும் இன்றுள்ள பொருளாதாரம் இந்த ஊர் மக்களின் கையில் தாறு மாறாக இருக்கிறது என்ற காரணத்தினால்! வீண் விரயம் பண்ண சொல்லவா வேண்டும்?

மேலே காண்பது கீழக்கரையில் ஒரு மிகப் பெரிய வசதி படைத்தவர்களின் திருமண பந்தல் மற்றும் வீதிகளில் போட்ட தோரண அலங்காரம். இதில் இடப்பட்டுள்ள பந்தலுக்கு ஆனா சிலவுகள் தோராயமாக எவ்வளவு தெரியுமா? ஐம்பது லட்சம் என்று சொல்லுகிறார்கள். அதுவும் ஒன்று அல்லது இரண்டு நாளைக்கு மட்டும் தான் இந்த சிலவுகள் என்றால்! மற்ற சிலவுகளை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

மேலே கண்ட இந்த இறை வசனம்! படித்த உலமாக்களுக்கு தெரியாதா? பட்டம் பெற்ற ஆலிம்களுக்கு தெரியாதா? தெரியும். தெரிந்தும் மறைத்து தனது கூறுகெட்ட மார்க்க உபதேசங்களினால் செயல் வடிவில் சாதிக்கிறார்கள். உங்களுடைய வஞ்சனைப் புகழ்ச்சிக்கு வரம்பு இல்லையா?

சாதாரணமாக இஸ்லாத்தில் இருக்கும் பகுத்தறிவான ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த விஷயம் தெரியும். அப்படி இருக்கும் போது! அறிவுரை சொல்ல வேண்டியவர்களே நெறிமுறை மீறு கிறார்களே? இது அல்லாஹ்வுக்கும், ரசூலுக்கும் செய்யும் மாறு அல்லவா? இந்த ஆடம்பர அனாச்சாரம், வரதட்சணைத் திருமணம் என்பது அல்லாஹ்வும் ரசூலும் சொல்லாதது மற்றும் செய்யாததும் என்று தெரிந்து வைத்தே மறைக்கிறீர்களே! இதை அல்லாஹ்விடம் மறைக்க முடியுமா? அல்லது நீங்கள் மறைத்தால் அது அவனுக்கு தெரியாதா? மறுமையில் முதலில் உங்களைத்தான் இதைப் பற்றி விசாரிப்பான் அதன் பின் தான் அனாச்சாரா வாதிகளை விசாரிப்பான். அப்பொழுது உங்களின் குருட்டு சிந்தனையில் உருவான உபதேசங்கள் அல்லாஹ்விடம் பொருட் படுத்தாமல் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள்.

அல்லாஹ் சொல்லுகிறான்!

“உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேஅடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! விரையம் செய்வோர் ஷைத்தான் களின் உடன் பிறப்புகளாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்”.

அல் குரான் 17:26,27 .

அது மட்டுமா? குறிப்பாக திருமணங்கள் குறைந்த செலவில் நடத்தப் படவேண்டுமென நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் வழியுருத்தி யுள்ளனர். " “குறைந்த செலவில் நடத்தப் படும் திருமணமே அதிகம் பரக்கத் நிறைந்ததாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : அஹ்மத் : 23388

நபிகள் நாயகம் (ஸல்) பரக்கத் என்று சொல்லுகிறார்களே! நீங்கள் செய்தது பரக்கத்தா? அல்லது அல்லாஹ் தந்த பரக்கத்தை விரட்டுகிறீர்களா? யோசித்து பார்க்க வேண்டாமா?.

இன்றைக்கு கீழக்கரையில் சாதாரணமாக ஒரு நடுத்தர குடும்பத்து வரதட்சணை திருமணம் என்றால்! குறைந்தது ஐந்து லட்சம். ஆனால் வசதி படைத்த இவர்கள் போடும் ஒரு நாள் பந்தல் சிலவு மட்டும் பல லட்சம், மற்றும் கீழக்கரையில் மேலத் தெருவில் சகத்துல்லா அப்பா வளாகம் என்று ஒரு திருமண மண்டபம். அந்த திருமணத்தை செய்து வைக்க வளாகம் இருக்கிறது.

அந்த வளாகத்திற்கு! ஒரு மாப்பிளைக்கு வாடகை சிலவு மட்டும்! ஒரு லட்சத்து முப்பத் தைந்தாயிரம் ரூபாய். இனி சீரியல் விளக்குகள், விருந்து உபச்சாரங்கள், அந்த விருந்தில் ஒருபுறம் சைவம், மறுபுறம் அசைவம், இனி இரவு சாப்பாடு வேறு அதற்கும் தனி சைவ , அசைவ உணவு. அதோடு இனிப்புடன் சுவையான பானம்.

அதன் பின்பு மனப் பெண்ணிற்கு சிறை கழட்டுதல், சீர் செய்தல், சிகை அலங்காரம் செய்ய ஒப்பனை யாளர்கள், மணப் பெண் மற்றும் மாப்பிள்ளை இருவருக்கும் நடக்கும் பந்தல் விழா, அதற்க்கு உறவினருக்கு விருந்து மற்றவருக்கு இனிப்பு, பார்வை யாளர்களுக்கு பாக்கெட் அல்லது பிஸ்கட் அதோடு ரோஸ் மில்க், அல்லது பாதாம் கீர் இப்படி கொடுப்பது. அதன் பின்பு மாப்பிள்ளைக்கு மாலை, கோட்டு சூட்டு, தாகிரா என்று ஒரு கேடுகெட்ட கொட்டு மேளம். அதாவது பக்கிர்சா கொட்டு மேளம். இதில் சினிமா பாட்டு மெட்டில் ராகம், அதை கேட்பதில் இவர்களுக்கு ஒரு மோகம். இதை எல்லாம் எங்கே போய் சொல்லுவது.

இப்படி இந்த வகையான அடம்பரத்திர்க்கு மட்டும் ஒரு சாதாரண நடுத்தர திருமணத்திற்கு பதினைந்து லட்சத்தில் இருந்து, இருபது லட்சம் வரை விரையமாகும். இதில் வரதட்சணை பணம், நகை நட்டுக்கள் தனி என்பது குறுப்பிடத்தக்கது. இதே போல் கிட்டத் தட்ட குறைந்தது ஐந்து அல்லது ஆறு திருமணமாவது இந்த டிசெம்பரில் மட்டும் நடக்கும், அப்படி என்றால் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

இது நடுத்தர திருமணம் என்றால்! செல்வச் சீமான்களின் திருமணம்! சொல்லவா வேண்டும். கோடிக்கணக்கில் இன்று இப்பொழுது நடந்த திருமணத்தில் விரயமாகி இருக்கிறதென்றால்! அல்லாஹ்வும் ரசூலும் சொன்ன சொல் எங்கே போய்விட்டது? எங்கும் சென்று விடவில்லை. அல்லாஹ்வின் குரானும், நபிகளாரின் பொன்மொழிகளும் அவரவர்கள் வீட்டில் அலங்கரித் துக் கொன்றிகின்றது. விதி விளக்காய் ஒன்றிரண்டு அல்லது அதற்க்கு மேலும் உள்ள குரான்கள் பள்ளியில் இருக்கும். ஆனால் படிக்க பயன்படாமல் தூங்கிக் கொன்றிருக்கும்.

ஊரில் உள்ளவர்களின் குலப் பெருமை, பணப்பெருமை, பகட்டுப் பெருமை, தான் என்ற அகங்காரம் விண்ணை முட்டும் அளவிற்கு விரிந்து, பரந்து கிடக்கின்றது. இந்த ஊரைப் பொறுத்த மட்டில் தனிமனித செல்வாக்கு தலை விரித்து ஆடுகிறதே! அதற்க்கு இந்த ஊர் நபர்களும் ஒத்துப் போகிறார்களே! சிந்திக்க மாட்டீர்களா? இரு விரல்களை அல்லாஹ் புரட்டினால் என்றால்! உங்கள் நிலை என்னவாகும்? என்று என்றாவது நினைத்த துண்டா? நம் கண்கள் அன்றாடம் பார்த்துக் கொன்றிக்கின்ற பூகம்பங்களும், சுனாமிகளும் சொல்லிக் கொண்டு வருகின்றதா? அல்லது மன்னாதி மன்னர்களை மட்டும் விட்டு வைத்து விட்டு செல்கிறதா? விரல் சொடுக்கும் நேரத்தில் அல்லாஹ்வின் விதி விளையாடிவிடும் என்பதை மறந்தது விட வேண்டாம்.

இப்படியெல்லாம் வீண் விரையம் செய்வது இது நமது மார்க்கத்தில் உள்ளதா? பணம் இருக்கிறது என்பதற்காக கலாச்சாரம் எனும் பேரில் அனாச்சாரம் செய்கிறீர்களே! அல்லா விடம் பதில் சொல்ல உங்களுக்கு துணிவிருக்கிறதா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இனிமையான எச்சரிக்கை செய்கிறார்கள்.

"பெண்கள் அவர்களின் செல்வத் திர்க்காகவும், அவர்களின் அழகுக் காகவும், அவர்களின் பாரம்பரியத் திற்காகவும், அவர்களின் நன்னடத் தைக்காகவும் மணந்து கொள்ளப் படுகின்றனர், நீ நன்னடத்தை உடையவளைத் தேர்வு செய்து வெற்றி அடைந்து கொள்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி 5090

இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெற்றி என்பதை எவ்வளவு அழகாக, ஆழமாக சொல்லுகிறார்கள். செல்வம் உடையவளை விட! நன்நடத்தை கொண்டவளை தேர்வு செய்ய சொல்லுகிறார்கள். அது தான் வெற்றியும் என்று சொல்லுகிறார்கள். ஆனால் இன்று நடப்பது நன் நடத்தைக்காகவா? செல்வத் திற்காக மட்டும் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பின்பு எப்படி உங்களுக்கு வெற்றி கிட்டும்?.

அது மட்டும் அல்ல இந்த ஊரில் நடக்கும் அட்டூழியம்!

புலியைப் பார்த்து பூனை சூடு வைத்தது போல் வசதி படைத்தவர்களை பார்த்து ஏழைகள் முதல் நடுத்தர வாதிகள் வரை இந்த ஆடம்பரத்தை செய்கிறார்கள் என்பதுதான் மிகவும் வருந்தத்தக்கது. என்ன ஒரு வித்தியாசம் என்றால்! அது அது அவர்கள் வசதிக் கேற்ப ஆடம்பரம் நடக்கின்றது. எப்படிப் பார்த்தாலும் ஆடம்பர அடிப்படையை வைத்துதான் நடக்கின்றது. என்பது மட்டும் உண்மை.

மேலும், இவர்கள் அதாவது வசதி படைத்தவர்கள் ஒரு திருமணத்திற்கு செய்யும் சிலவுகளை எடுத்துக் கொண்டால்! அல்லாஹ்விற்காக நூறு பள்ளியை கட்டி விடலாம். சுபஹானல்லாஹ்! இது ஒன்றும் வெறும் வாய் சொல்லிர்க்காகவோ, அல்லது நாங்கள் எதோ பொறாமைப் பட்டோ இதை சொல்லவில்லை.

இன்று இதே ஊரில், நம் கண்முன்னே எத்தனையோ திருமணம் ஆகாமல் பல குமறுப் பெண்கள் வயது முற்றிய நிலையிலும் திருமணம் நடக்காமல் இருப்பதை கண்கூடாக காண்கிறோம். அப்படி இருப்பதோடு மட்டும் அல்ல, இந்த குமறுப் பெண்களுக்காக அந்த பெண்களின் பெற்றோர்கள் ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு ஜாமாத்திலும் படியேறி, கை ஏந்தி, மடிவிரித்து யாசகம் எனும் பிச்சை கேட்பதை கண்ணீரோடு நாம் (நாம் என்பதை விட ) நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்.

நான் கேட்கிறேன் கீழக்கரையில் இருக்கும் தனவந்தர்களைப் பார்த்து!

இப்படி படியேரிவரும் இந்த பெண்களைப் பெற்றவர்களின் நிலை உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா? அல்லது இவர்களின் கண்ணீர் துடைக்க வழி சொல்ல முடியவில்லையா? இன்று எவ்வளவு பணத்தை வீண் விரையம் செய்கிறீர்கள்? என்றாவது இவர்களின் நிலையை நீங்கள் பார்த்த துண்டா? அல்லது வரதட்சணை இல்லாத திருமணத்தை நடத்தியதுண்டா? அல்லது இப்படி யாசகம் கேட்போருக்கு வழி வகை செய்து கொடுக்க உங்கள் ஜமாஅத் மூலம் ஏதேனும் நடவடிக்கை எடுத்த துண்டா? இல்லையே! நீங்களும் வரதட்சணை வாங்குகிறீர்கள் பிறரையும் தூண்டுகிறீர்கள் அதற்க்கு ஜமாத்தும் துணை போகிறீர்கள்.





அப்படி இருக்கும் போது ஏழைகள் படும் பாடு உங்கள் கண்களுக்கு தெரியவா போகிறது? இப்படி நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதினால் தான் பல குமருகள் வீட்டை விட்டு ஓடி விடுகிறார்கள். விட்டுக்குள் முடங்கு கிறார்கள், வீதிக்கு வர தயங்கு கிறார்கள், விரும்பாதவனை தனக்கு ஒரு துணையாக தானாக தேடிக் கொள்கிறார்கள் அல்லது தேர்ந்து எடுக்கிறார்கள். இளமை வீணாவதும், இனிமையான வாழ்வு காணாவதும், தனிமை தாகம் பாழாவதும், வாடிய தேகம் நூலாவதும், இதற்கெல்லாம் வரதட்சணை வாங்கும் கூட்டம் தான் காரணம்! அப்படி சீரழியும் ஒவ்வொரு பெண்ணிர்க் காகவும் அல்லாஹ் விடத்தில் நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். என்பது உங்களுக்கு தெரியாதா?





ஊரில் பெரிய வசதியுள்ள ஜமாஅத் என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் பத்தாது! பல நன்மையான காரியங்களையும் செய்து இருக்க வேண்டும். செய்து கொடுக்க வேண்டும்.

இதில் நன்மை செய்கிறோம் என்று சூளுரைப் பவர்கள்! ஒருபக்கம் வரதட்சணை கொடுமை, மறுபக்கம் வணக்கத்தில் வஞ்சனை கொடுமை:

இன்று தமிழகத்தில் எத்தனையோ இடத்தில் பள்ளி காட்ட முடியாமல் கூரையில் தொழுகை நடந்து கொண்டு இருக்கின்றது. அதை நாம் கண் கூடாக காண்கிறோம். அதே சமயம் நீங்களும் பள்ளிகள் கட்டி கொடுக்கத்தான் செய்கிறீர்கள், அதை நாங்கள் மறுக்க வில்லை. அந்த பள்ளியில் எப்படியெல்லாம் கரும் பலகைகளில் வாசகம் எழுதுகீறீர்கள்? நான்கு மதஹபுகள் மட்டும் தான் தொழ வேண்டும், தொப்பி அணியாதவர்கள் தொழக்கூடாது, விரல் அசைப் பவர்கள் தொழவரக் கூடாது என்று எச்சரிக்கிறீர்கள்! இப்படி எழுதி போட்டு நீங்கள் மட்டும் தொழும் தொழுகையைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) சொல்லித் தந்தார்களா? அல்லது அப்படித்தான் தொழ வேண்டுமா?

அப்படி தொழக்கூடிய பள்ளியைத்தான் நீங்கள் கட்டிக் கொடுக்கிறீர்கள் அதற்குத்தான் வாரி வழங்குகிறீர்கள். காரணம்? அந்தப் பள்ளியில் வைத்து தான் வரதட்சணை கணக்கிடப் படுகிறது, பங்குகள் பிரிக்கப்பட்டுகிறது, கொடுக்கல், வாங்கல் நடக்கிறது, அது பத்தாது என்று வசை பேசுகிறீர்கள், பொழுது போக்கு கிறீர்கள். பள்ளியில் அலங்கார விளக்குகள் தொங்கவிடு கிறீர்கள் இந்த கூத்து தானே உங்கள் பள்ளியில் நடக்கிறது? இதற்க்கெல்லாம் காரணம் உங்கள் உள்ளங்களில் இக்லாஸ் இல்லை, இறுமாப்புத் தான் இருக்கிறது. அப்படி இக்லாஸ் இருந்தால்! இந்த வாசகம் பள்ளியில் இடம் பெறுமா? இந்த கூத்துக்கள் அரங்கேறுமா? சிந்தித்து பார்க்கவேண்டாமா?

இதை எல்லாம் நான் குறை கூறுவதாகவோ அல்லது இதெல்லாம் குழப்பத் திர்குண்டான சொல் என்றோ நினைக்க வேண்டாம்! உங்களைப் போல் செல்வந்தர்கள் வீண் விரையம் செய்யும் பொருளாதாரத்தை, ஏழை எளியவர்களுக்கும், மென்மையான வணக்க வழிபாட்டிற்கும் உங்கள் உள்ளங்கள் மித மிஞ்சி வந்தால்! உண்மையான நம் இஸ்லாம் மார்க்கத்தை உவமையாக்கிக் காட்டலாம். உங்களை எல்லாம் உல்லாசமாக வாழவேண்டாம் என்று சொல்லவில்லை, நமது இஸ்லாமிய வாழ்க்கை ஒரு உபதேச மாக இருக்கவேண்டும் என்று சொல்லுகிறேன்.

எனதூர் கீழக்கரை மக்களே! நீங்களும் வறுமையில் இருந்து இன்று கொஞ்சம் வசதியில் இருக்கிறீர்கள். அல்லா தந்த பரக்கத்தை இப்படி வீண் விரிய சிலவு செய்ய நீங்களும் துடிக்கிறீர்களே! இது நியாயமா? நாமெல்லாம் இப்படி நடக்கும் திருமணத்தை புறக்கணிக்க வேண்டாமா? உங்கள் பெண் குமருகளை மட்டும் நினைத்தால் போதுமா? மற்ற நம் சகோதர, சகோதரிகளின் குமருகளை நிணைக்க வேண்டாமா? ஆடம்பர கூத்துக்களை ஒதுக்க வேண்டாமா? அடிக்கின்ற கும்மாளங்களை நிறுத்த வேண்டாமா? இதர்க்கெல்லாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டுமே என்ற பயம் வர வேண்டாமா? அற்ப துனியா வாழ்வு எத்தனை நாள் நீடிக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா?

இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் நம் சிந்தனை அனைத்தும் அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய தூதரையும் பின் பற்றுகிற நன் மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக. அனைத்து அனாச்சாரமும் நம்மை விட்டு ஒழிய அல்லாஹ்விடம் அனைவரும் பிரார்த் திப்போமாக.

S.L.நசீருதீன்

2 comments:

  1. சிறப்பான பகிர்வு சம்மந்தப்பட்டவர்கள் உணரவேண்டும் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  2. //அனைத்து அனாச்சாரமும் நம்மை விட்டு ஒழிய அல்லாஹ்விடம் அனைவரும் பிரார்த்திப்போமாக//

    இன்ஷா அல்லாஹ். உங்கள் ஊர் இளைஞர்களிடமும் பேசுங்கள்.

    ReplyDelete